ATM இயந்திரத்தில் இனி ரூ. 5000-திற்கு மேல் பணம் எடுக்க கட்டணமா? எவ்வளவு என்று தெரியுமா?

 இனி ஏடிஎம்மில் இருந்து நீங்கள் பணம் எடுக்க வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


5000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் 

குறிப்பாக ATM இயந்திரத்திலிருந்து 5000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், உங்களின் கணக்கிலிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏடிஎம்மில் பணம் எடுக்கும் விதிமுறைகளில் மாற்றங்கள் வரப்போகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.



இந்திய ரிசர்வ் வங்கியின் திட்டம் என்ன? 

கொரோனா நெருக்கடியின் இந்த காலகட்டத்தில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு பின்னடைவு அடுத்த மாதம் முதல் ஏற்படக்கூடும். இப்போது, ​​நீங்கள் ஒரு வங்கி ஏடிஎம்மில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்தால், அதற்கு நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இதை இப்போது பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.



ஆன்லைன் பரிவர்த்தனையை அதிகரிக்க முடிவு 

ஏடிஎம் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு, ஏடிஎம்மில் இருந்து ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் வழங்க யோசித்து வருகிறது. உண்மையில், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அதிகமான பரிவர்த்தனைகளைச் செய்ய ரிசர்வ் வங்கி விரும்புகிறது.




இதுதான் காரணமா? 

மக்கள் பணம் டெபாசிட் செய்ய மட்டுமே ஏடிஎம்களைப் இப்போது பெரிதும் பயன்படுத்துகிறார்கள். மேலும், பெரிய நகரங்களில் ஏடிஎம்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட சிறு நகரங்களில் ஏடிஎம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் புதிய விதியை அடுத்த மாதம் முதல் களமிறக்கப்போகிறது.



எவ்வளவு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்? 

குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஏடிஎம்மில் இருந்து ஒரே நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகையை எடுப்பதற்கு வாடிக்கையாளரிடமிருந்து ரூ .24 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நடைமுறையில் உள்ள அமைப்பின் கீழ் மாதம் ஐந்து பரிவர்த்தனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.



ஐந்து இலவச பரிவர்த்தனைகள் சேர்க்கப்படாதா? 

புதிய விதியில், முதல் ஐந்து இலவச பரிவர்த்தனைகள் சேர்க்கப்படாது. அதாவது, எந்தவொரு பரிவர்த்தனையிலும், ஒரு வாடிக்கையாளர் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை எடுக்கும் போது 24 ரூபாய் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.



நடைமுறையில் உள்ள விதி 

தற்போதைய விதியின் கீழ், ஒரு மாதத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் பொழுது, உங்களுடைய ஆறாவது பரிவர்த்தனையில் இருந்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ .20 வசூலிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Powered by Blogger.