நமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்கள்! எப்படி?

 இருசக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ, எதுவானாலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்கிறோம். அத்துடன் தேவை மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்றாற்போல் தரமான எரிபொருளையும் அந்த வாகனத்துக்குக் கொடுக்கிறோம். அதுவும் நம்பிக்கையான இடத்தில் எனப் பார்த்துப் பார்த்து எரிபொருள் நிரப்பிப் பராமரிக்கிறோம். சாதாரண வாகனம் நன்றாக ஓடவே இவ்வளவு மெனக்கெடும் நாம் நம் உடலுக்கு மட்டும் ஏன் வஞ்சனை செய்கிறோம்?




தினமும் மூன்று வேளை உணவு, சிலநேரம் அதிகப்படியாக உணவு. ஓர் உணவு செரிப்பதற்கு முன்பு அடுத்த உணவு. `பராமரிப்பு என்றால் என்ன’ என்று கேட்குமளவுக்கு உள்ளது நம் உடல் பராமரிப்பு. பார்க்கும் இடங்களில் கிடைக்கும் தரமற்ற உணவு, செயற்கை சுவையூட்டப்பட்ட உணவு என, பாவம்... நம் வயிற்றுக்கு ஓய்வே கிடையாது. காலையில் தொடங்கி பின்னிரவு வரை ஏதேனும் ஒன்றை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறோம். நம் வயிறு, எத்தனை நாளைக்குத்தான் உழைத்துக்கொண்டே இருக்கும் என என்றாவது யோசித்திருக்கிறோமா?


சாதாரண வாகனத்தை எப்படிச் சர்வீஸ் செய்கிறோமோ, அதேபோல் உடலையும் சர்வீஸ் செய்ய வேண்டும். உழைப்பின்றி உடலுக்கு எரிபொருளான உணவை மட்டும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் வயிறு சம்பந்தமான பிரச்னைகளில் தொடங்கி செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் எனப் பல்வேறு உடல் பிரச்னைகள் விரைவில் வந்தடையும். சர்வீஸ் செய்யாவிட்டால் ஒரு வாகனம் எப்படிச் சூடேறி மற்ற பாகங்களைச் சேதப்படுத்துமோ அவ்வாறு உடலும் சூடாகி உடலில் இருக்கும் மற்ற உறுப்புகளை, குறிப்பாக ரத்தத்தைச் சூடாக்கி சீரான உடலமைப்பை மாற்றி உடல்பருமனுக்கு வழிவகுத்துவிடும்.


அது என்ன சர்வீஸ்? வாகனத்தை சர்வீஸ் செய்யும்போது ஏதேனும் தொந்தரவு இருந்தால் அதை மெக்கானிக்கிடம் சொல்வோம். அல்லது எல்லா பாகமும் சரியாக உள்ளதா என்று பார்ப்போம். சில நேரம் இன்ஜின் ஆயிலை மாற்றுவோம். 


அதேபோல்தான் ஒவ்வொருநாளும் நாம் உண்ணும் உணவைச் சீராக உட்கிரகித்து அது சக்தியாக மாறுகிறதா, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதிக உஷ்ணம் இல்லாத மூச்சுக்காற்று, சிறுநீர், மலம், வியர்வை போன்றவை சீராக வெளியேற வேண்டும். மேலும், உடல் சூடு சீராக உள்ளதா என்பதையும் சோதித்துக்கொள்ள வேண்டும். 


முதலில் உண்ட உணவு செரிமானமடைவதற்குள் அடுத்தடுத்து உணவுகளை வயிற்றில் போடுவதால் வயிற்றில் உள்ள உணவுகள் ஒன்றோடு ஒன்று வினைபுரிந்து புளிக்கத் தொடங்கிவிடும். இதனால் புளிச்ச ஏப்பம், எதுக்களித்தல், நெஞ்சு கரித்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். எனவே, அவற்றை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.


எவ்வாறு உடலை சர்வீஸ் (பராமரிப்பது) செய்வது?


மாதமொருமுறை உண்ணாநோன்பு  இருப்பதுதான் உடலை சர்வீஸ் செய்வதாகும். சுத்தமான நீரை மட்டும் அருந்தி உடலுக்கும் வயிற்றுக்கும் ஓய்வு கொடுப்பதால் நோய்கள் நம்மை நெருங்காது. நமது முன்னோர், பண்டிகை விசேஷங்களுக்குப் பிறகு உண்ணாநோன்பு இருப்பதற்காக ஒரு விரதத்தையும் கூடவே வைத்தது இதற்காகத்தான். வயிறுமுட்ட உண்ணாமல் விரதம் என்ற பெயரில் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்தார்கள். அதனால் மாதம் ஒருமுறை உண்ணாநோன்பு இருக்க வேண்டியது அவசியம்.


என்னால் ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள் ஒருநாள் முழுவதும் பழங்களையும் பழச்சாறுகளையும் எடுத்துக்கொள்ளலாம். இளநீர், தேங்காய், பப்பாளி, கொய்யா, வாழைப்பழம், சாத்துக்குடி, உலர் பழங்கள் மற்றும் முந்திரி, பாதாம் போன்ற கொட்டைப் பருப்புகளைச் சாப்பிடலாம். அதாவது சமைத்த உணவைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள கழிவுகள் அடித்துக்கொண்டு வெளியே வந்துவிடும். அத்துடன் அந்த நாளில் சிறு சிறு வேலைகளை மட்டும் செய்து, வீட்டில் மகிழ்வான சூழலில் ஓய்வெடுப்பது அவசியம். 


இந்த ஒரு நாள் உண்ணா நோன்பால் என்ன பயன்?


உண்ணா நோன்பு இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறுவதுடன் நுரையீரல், தோல், குடல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளில் உள்ள கழிவுகளும் வெளியேறும். இதனால் உடல் தூய்மை அடையும். இந்த உண்ணாநோன்பு இருக்கும் காலத்தில் அதிகமான நீரைப் (சீரகம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து பானையில் வைத்த நீர்) பருகுவது அவசியம். இப்படிப் பருகுவதால் உடல் வெப்பம் குறைவதுடன் உடலில் உள்ள கழிவுகள் எளிதாக வெளியேறும். உடல் கழிவுகள் நீங்குவதுடன், உடலில் உள்ள பாகமும் உடலிலுள்ள உறுப்புகளும் புத்துணர்வு பெறும். இந்த உண்ணா நோன்புக்குப் பிறகு உடல், மனம் இரண்டும் வலிமை பெறுவதுடன் புதிய வடிவத்தையும் பெறும். குறிப்பாக, உடலின் செரிமான சக்தி, இயக்க சக்தி, நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த மூன்று சக்திகளும் உடலில் பலத்தைக் குறிப்பதாகும். இவை மூன்றும் அதிகரித்தால் உடலில் எந்த நோய்த் தாக்குதலும் ஏற்படாது. கழிவுகள் வெளியேற்றம் உடல் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு. இந்த உண்ணா நோன்பால் உடல் உறுப்புகள் புத்துணர்வு பெறும். 


வயிற்றை ஒருநாள் காய வைப்பதால் செரிமான மண்டலமும் செரிமான சுரப்பிகளும் சீரான இயக்கத்தை அடையும். மேலும், உடலில் வெப்பம் சமநிலையை அடைய உதவும். 


யாரெல்லாம் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்?


பொதுவாக 20 வயதைத் தாண்டிய அனைவரும் உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். உடலின் தன்மைக்கு ஏற்ப கடைபிடிக்கலாம். இவ்வாறு மாதம் ஒருமுறை நம் உடலை சர்வீஸ் செய்வதால் பல ஆண்டுகள் பழுதில்லாமல் புத்துணர்வோடும் இளமையாகவும் நம் உடல் என்னும் வண்டியை ஆரோக்கியமாக ஓட்டமுடியும்.

No comments:

Powered by Blogger.